spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்117 - படர்மெலிந் திரங்கல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

117 – படர்மெலிந் திரங்கல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

117. படர்மெலிந் திரங்கல் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1161. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்
          கூற்றுநீர் போல மிகும்

கலைஞர் குறல் விளக்கம்இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்.

we-r-hiring

1162. கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
          குரைத்தலும் நாணுத் தரும்

கலைஞர் குறல் விளக்கம்காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.

1163. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
         நோனா உடம்பின் அகத்து

கலைஞர் குறல் விளக்கம்பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது. ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது.

1164. காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
          ஏமப் புணைமன்னும் இல்

கலைஞர் குறல் விளக்கம்காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது. ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை.

1165. துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
          நட்பினுள் ஆற்று பவர்

கலைஞர் குறல் விளக்கம்நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக் கூடியவர். பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?

1166. இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
          துன்பம் அதனிற் பெரிது

கலைஞர் குறல் விளக்கம்காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ,கடலைவிடப் பெரியது.

1167. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
         யாமத்தும் யானே உளேன்

கலைஞர் குறல் விளக்கம்நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்.

1168. மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
          என்னல்ல தில்லை துணை

கலைஞர் குறல் விளக்கம்இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.

1169. கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
          நெடிய கழியும் இரா

கலைஞர் குறல் விளக்கம்இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.

1170. உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
          நீந்தல மன்னோவென் கண்

கலைஞர் குறல் விளக்கம்காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

MUST READ