1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு குரைக்கோ பிற
கலைஞர் குறல் விளக்கம் – என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?

1182.அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு
கலைஞர் குறல் விளக்கம் – பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!
1183. சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து
கலைஞர் குறல் விளக்கம் – காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும் நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.
1184. உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு
கலைஞர் குறல் விளக்கம் – யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது. என்னை யறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?
1185. உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது
கலைஞர் குறல் விளக்கம் – என்னைப் பிரிந்து என் காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை. அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம் .
1186. விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு
கலைஞர் குறல் விளக்கம் – விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும் போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது.
1187. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு
கலைஞர் குறல் விளக்கம் – தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவு தான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!
1188. பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்
கலைஞர் குறல் விளக்கம் – இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துப் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம். காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே.
1189. பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்
கலைஞர் குறல் விளக்கம் – பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!
1190. பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்
கலைஞர் குறல் விளக்கம் – என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!