அதிமுக ஒருங்கிணைப்புக்கு எடப்பாடி பழனிசாமி புதிய ஃபார்முலா ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், இதன் படி ஓபிஎஸ் மீண்டும் கட்சிக்குள் வருவதாகவும், மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு நிறைவு பெற்றுள்ளது. அடுத்தக்கட்டமாக என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டபோது பொறுத்திருந்து பாருங்க, என்று கூறியுள்ளார். அவர் ராமதாஸ் பாணியில் சொல்லியுள்ளார். செங்கோட்டையன் டோட்டல் ஃபெயிலியர் சப்ஜெக்ட் தான். செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்தார். எடப்பாடி டெல்லிக்கு போய் அமித்ஷாவை சந்திக்கப் போகிறார். இதை எல்லாம் சொல்கிறீர்கள். அமித்ஷாவுக்கு வேறு வேலையே இல்லை. நடுவில் ஜெயலலிதாவின் பெண் என்று சொல்லிக்கொள்ளும் அமிர்தாவும் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அவர் அதிமுகவில் ஒற்றுமை இல்லை என்றும், எல்லோரும் சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று அமித்ஷாவிடம் சொல்லி உள்ளார்.
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். அதே நாளில் பியூஷ் கோயல், பி.எல். சந்தோஷ் ஆகியோர் சென்னை வர உள்ளனர். டெல்லியில் நடைபெற்ற பாஜக கோர் கமிட்டி கூட்டத்திற்கு அண்ணாமலை போகவில்லை. அண்மையில் தொலைக்காட்சி பேட்டியில் பேசிய குருமூர்த்தி அண்ணாமலை வேகமாக செயல்பட்டதால் தான் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்கிற தகவலை வெளியிட்டார். மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகள் முயற்சித்து பிராமணரை முதலமைச்சராக கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

அமிர்தாவை, அமித்ஷாவிடம் அனுப்பியவர் சசிகலா. அவருடைய நோக்கம் என்பது அதிமுக பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்பதுதான். தற்போதைக்கு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கட்டும். ஆனால் தேர்தல் முடிந்து அதிமுக வெற்றி பெற்றால், வேலுமணி, தங்கமணி, வீரமணி போன்றவர்களை வைத்து எம்எல்ஏக்களை காசு கொடுத்து தூக்க வேண்டும். பாஜக உதவியுடன், ஆட்சியை அமைப்பது. பணத்தில் சசிகலாவை மிஞ்சிய ஆட்கள் கிடையாது.
தற்போது அமலாக்கத்துறையால் முடக்கப்படாத சொத்துக்களை எல்லாம் விற்று வருகிறார். ஏதோ ஒரு விஷயத்திற்காக பணத்தை தயார் செய்து கொண்டிருக்கிறார். அதில் எடப்பாடி பழனிசாமி ஒத்துவந்தால் ஓகே. இல்லா விட்டால் அவரை காலி செய்து விட்டு, சசிகலா பொதுச்செயலாளர். வேலுமணி முதல்வர். செங்கோட்டையன் துணைப் பொதுச்செயலாளர் ஆவது. இது தொடர்பாக பேச சரியான ஆள் கிடைக்காததால் ஜெயலலிதா பெண் என்று அமிர்தாவை அனுப்பி அமித்ஷாவிடம் பேச வைத்துள்ளார் என தகவல் பரவி வருகிறது.

செங்கோட்டையனை, அமித்ஷா சந்தித்ததால் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் உள்ளார். பாஜக தரப்பில் அமித்ஷா, செங்கோட்டையனை சந்திக்கவே இல்லை. அவரை திட்டி அனுப்பிவிட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளனர். செங்கோட்டைன் நிர்மலா சீதாராமனை சந்தித்தது உறுதியாகி உள்ளது. ஆனால் அமித்ஷாவை சந்தித்ததற்காக புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதற்கு பிறகு செங்கோட்டையன் வைத்திலிங்கம் உள்ளிட்டோரை சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒற்றுமைக்கான பார்முலா ஒன்றுடன் டெல்லி செல்கிறார். இந்த ஃபார்முலாவில் ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட உள்ளார். அவருக்கு கட்சியில் நல்ல பொறுப்பு வழங்கப்பட உள்ளது. ஆனால் எந்த பொறுப்பு என்கிற விவரம் தெரியவில்லை.

ரவீந்திரநாத் மட்டும்தான் பிரச்சினையாக உள்ளார். அவரையும் சரிகட்டி விடுவார்கள். டிடிவி தினகரனுக்கு விஜய் கூட செல்லும் வாய்ப்புதான் உள்ளது. ஆனால் விஜய், ஊழல் வழக்கு உள்ள தினகரனை சேர்க்க விஜய் தயக்கம் காட்டுகிறார். தினகரன் மீதான லண்டன் ஓட்டல் வழக்கு நிலுவையில் உள்ளது. பல்லாயிரம் கோடி மதிப்பிலான இந்த ஓட்டலுக்காக தான் தினகரன் கட்சி நடத்துகிறார். எனவே அவரை என்டிஏ கூட்டணியில் வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு சீட் வழங்குகிறோம். ஆனால் எக்காரணம் கொண்டும் சசிகலாவை ஏற்க மாட்டோம் என்று எடப்பாடி சொல்லிவிட்டார். இதுதான் அவருடைய பார்முலா.
டிடிவி தினகரன் அண்ணாமலையால் இயக்கப்படுகிறார். எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறபோது அண்ணாமலை பைல்ஸ் என்கிற ஒரு பைல்சை கொண்டு போகிறார். அதில் அண்ணாமலை வாங்கிய ரூ.90 கோடி சொத்து, அவர் தொடங்கியுள்ள நிறுவனங்கள், மணல் மாஃபியா உடன் அவருக்கு இருக்கும் தொடர்புகள் எல்லாம் அவர் மீது உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்வது திட்டம்.

அண்ணாமலையின் ஆபரேஷன் என்பது முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்பதுதான். அண்ணாமலை, வேலுமணி, ஜக்கி வாசுதேவ் எல்லோரும் சேர்ந்து தான் இந்த ஆபரேஷனை நடத்துகிறார்கள். எனவே அண்ணாமலையை ஆஃப் செய்தால், தினகரனையும் ஆஃப் செய்து விடலாம். அதற்கு அண்ணாமலை பைல்ஸ் முக்கியமானது. ஏற்கனவே நிர்மலா சீதாராமன் தரப்பில் இருந்து அமித்ஷாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.3000 கோடி அவர் எப்படி சம்பாதித்தார். எப்பாடி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற விவரங்கள் அதில் உள்ளன.
அதேபோன்று, அண்ணாமலை பைல்ஸ்சை தற்போது எடப்பாடி பழனிசாமி கொண்டு செல்கிறார். ஓபிஎஸ்க்கான ஆஃபர். அவர் கட்சிக்குள் வருவதையே விரும்புகிறார். பெரிய டிமாண்ட் எதுவும் வைக்கவில்லை. அவரிடம் விரிவாக பேசிவிட்டனர். அதை ஏற்க ஓபிஎஸ் தயாராகவே உள்ளார். இதை அறிவிக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி உள்ளது. ஓபிஎஸ், தினகரன், சசிகலா என எல்லோரையும் இயக்குவது அண்ணாமலை தான். அவருடைய பியூசை பிடுங்குவதுதான் இந்த பயணத்தின் நோக்கமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
