கார்த்தி – லோகேஷ் கனகராஜின் ‘கைதி 2’ திரைப்படம் ப்ராப் ஆனதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என அடுத்தடுத்த படங்களின் மூலம் பல முன்னணி நடிகர்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இருப்பினும் இவர் இயக்கியிருந்த ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. எனவே பலரும் லோகேஷ் கனகராஜை ட்ரோல் செய்து வந்தனர். அதேசமயம் கூலி படத்திற்கு கிடைத்த ரிசல்ட் காரணமாக அமீர்கானுடன் லோகேஷ், கூட்டணி அமைக்க இருந்த சூப்பர் ஹீரோ படமும் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து ‘கைதி 2’ திரைப்படமும் கைவிடப்பட்டிருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தமிழ் சினிமாவில் எல்சியு என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் அடுத்தடுத்த படங்களை இயக்கி வந்தவர் லோகேஷ். அதில் ‘கைதி’ திரைப்படம் தான் இந்த கான்செப்டின் ஆரம்பப் புள்ளியாகும். மேலும் லோகேஷ் கம்பேக் கொடுப்பதற்கான ஒரே சாய்ஸ் ‘கைதி 2’ திரைப்படம் தான். ஆனால் இந்த படமே கைவிடப்பட்டதாக வெளிவரும் தகவல்கள் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது. அதாவது லோகேஷ் கனகராஜ் கைதி 2 திரைப்படத்தில் சில மாற்றங்களை செய்ய இருந்ததால், நடிகர் கார்த்தி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் இந்த படத்திற்காக ரூ.75 கோடி சம்பளம் கேட்டதாலும் இப்படம் கைவிடப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இருப்பினும் ‘கைதி 2’ திரைப்படம் கைவிடப்பட்டது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.