இயக்குனர் மாரி செல்வராஜ், பைசன் படம் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் மாரி செல்வராஜ். இவர் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன. அதைத்தொடர்ந்து இவர், பைசன் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. நிவாஸ் கே. பிரசன்னா இதற்கு இசையமைக்க எழில் அரசு ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் சமீபத்தில் நடந்த பேட்டியில் ‘பைசன்’ படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில், “பைசன் படத்தில் பசுபதியின் கதாபாத்திரம் மிகப்பெரிய கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஜே. சூர்யா, விக்ரம் சார் ஆகியோரிடம் பேசினேன். ஆனால் விக்ரம் சார், ‘துருவ் தனியாக வரணும்னு தோணுது’ என்று ஒரு நியாயமான காரணத்தை சொன்னார். பொதுவாகவே நான் அப்பா கதாபாத்திரங்களை வலுவாக வடிவமைப்பேன். அது ஏதோ ஒரு வகையில் பேசுபொருளாக மாறும்” என்று தெரிவித்துள்ளார்.