ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் D55 படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ரங்கூன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. அதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படத்தை இயக்கினார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்து ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இதை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி தனுஷின் 55 வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு தற்காலிகமாக D55 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச்செழியன் தயாரிக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த பல மாதங்களுக்கு முன்னதாகவே சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் பின்னர் இந்த படத்தில் நடிகை மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்க உள்ளார் என பேச்சு அடிபட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது.
வருகின்ற நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. இது தவிர தனுஷ் தேரே இஷ்க் மெய்ன், D54, D56, அப்துல் கலாம் மற்றும் இளையராஜாவின் பயோபிக் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.