ஆர்.ஜே. பாலாஜி, கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆர்.ஜே. பாலாஜி ‘நானும் ரௌடி தான்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதன் பின்னர் இவர் எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன், சொர்க்கவாசல் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இது தவிர ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தது இவர் இயக்கி வரும் ‘கருப்பு’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தில் நடிகர் சூர்யா வக்கீலாகவும், தெய்வத்தன்மை கொண்ட மனிதராகவும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த படத்தில் திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. அடுத்தது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து முதல் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆர்.ஜே. பாலாஜி, இப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்.
அதன்படி அவர், “கருப்பு படம் முடிந்துவிட்டது. நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். ஒரு நல்ல நாளில் இந்த படத்தை வெளியிட இருக்கிறோம். மற்றவைகளை படத்தில் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ‘கருப்பு’ படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடித்திருக்கிறார் என்று பல தகவல்கள் பரவி வந்த நிலையில் தற்போது அவரே இதனை உறுதி செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்றும் பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் அவருடைய கதாபாத்திரம் என்ன மாதிரியான கதாபாத்திரமாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


