சூர்யா 47 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா கடைசியாக ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து சூர்யா, ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் தனது 46வது படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக தனது 47வது திரைப்படத்தை ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை சூர்யா, தான் புதியதாக தொடங்க இருக்கும் ‘ழகரம்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது. மேலும் இந்த படத்தில் சுசின் ஷியாம் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார் என்றும் இதில் பகத் பாஸில், நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இது தவிர காக்க காக்க, சிங்கம் ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் சூர்யா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என ஏற்கனவே தகவல் கசிந்து இருந்தது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இந்த படம் தொடர்பான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


