
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி , கோவையில் தங்கி கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி, ஞாயிறு இரவு கோவை விமான நிலையம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் தனது நண்பருடன் காரில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் அங்கே வந்த மூன்று பேர் காரில் அமர்ந்திருந்த அந்த மாணவியின் நண்பரை ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர். பிறகு, அதே பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு, அதிகாலை 2 மணியளவில் மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் தனது செல்போன் மூலமாக பீளமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ஆண் நண்பரையும் , மாணவியையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த பீளமேடு போலீஸார், தனிப்படை அமைத்து தப்பியோடிய மூவரையும் அடையாளம் கண்டு , நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அவர்களை அதிரடியாக சுட்டுப்பிடித்தனர். குற்றவாளிகளான சகோதரர்கள் சதீஷ்(20), கார்த்திக்(21) மற்றும் அவர்களது உறவினரான குணா(30) ஆகிய 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாணவிக்கு நிகழ்ந்த துயரம் மனிததன்மையற்ற செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.
இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.


