ரவி மோகனுக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஜெயம், எம். குமரன், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் ரவி.
இவர் தற்போது ‘பராசக்தி’ திரைப்படத்தில் வில்லனாகவும், ‘கராத்தே பாபு’ திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இது தவிர தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள இவர், ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் ப்ரோ கோட் எனும் படத்தை தானே தயாரித்து நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் ரவியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன், மாளவிகா மனோஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரிப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர்.
இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ப்ரோமோவுடன் வெளியாகி அந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வந்தது. ஆனால் அதே சமயம் இந்த படத்திற்கு சிக்கலும் வந்துள்ளது. அதாவது டெல்லியைச் சேர்ந்த மதுபான நிறுவனம் ஒன்று தங்களுக்கு சொந்தமான ‘ப்ரோ கோட்’ என்ற தலைப்பை, ரவி மோகன் தனது படத்தில் பயன்படுத்தக் கூடாது எனவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்திருந்தது. இது தொடர்பான வழக்கு கடந்த அக்டோபர் மாத இறுதியில் விசாரணைக்கு வந்த போது டெல்லி உயர்நீதிமன்றம், ப்ரோ கோட் என்ற தலைப்பை பயன்படுத்த ரவி மோகன் ஸ்டுடியோஸ்-க்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நடிகர் ரவி, அந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீடு விசாரணையில் டெல்லி உயர்நீதிமன்றம், இடைக்கால தடையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. இது ரவிக்கும், ப்ரோ கோட் படக்குழுவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


