ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி படத்தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி படத்தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அப்போது, ஜனநாயகன் படத்திற்கு முதலில் UA சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு பின்னர் மறுத்தகாத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் 6ஆம் தேதி தணிக்கை துறை உத்தரவை ஏன் எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த வழக்கில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், தணிக்கை சான்றிதழ் கோருவது தொடர்பான மனு வரும் ஜனவரி 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர இருப்பதால், உயர்நீதிமன்றத்தை நாடி வாதங்களை முன்வைக்க ஆலோசனை வழங்கி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனிடையே, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் படம் வெளியாவது தள்ளி போய் உள்ளது.


