தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள், திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. முதல் முறையாக தேர்தலை சந்தித்த தவெக, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், ஆட்சி அமைக்க தேவையான முழு பெரும்பான்மை எண்களை பெறாததால் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்த விஜய், மக்களிடையே தனித்துவமான ஆதரவை பெற்றார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க தமக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்ற காரணத்தால், ஆட்சி அமைக்க அழைப்பு வழங்கப்படாதது அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

இந்த சூழலில், தொல். திருமாவளவன், வீரப்பாண்டியன் உள்ளிட்ட இடதுசாரி மற்றும் திராவிட இயக்கத் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். கொள்கை ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், ஜனநாயக அடிப்படையில் தனிப்பெரும் கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
“நான் உங்களுடன் உடன்படவில்லை, ஆனால் நீங்கள் பேசுவதற்கான உரிமையை என் உயிர் கொடுத்தாவது காப்பேன்.” என்ற வால்டேர் கருத்தை நினைவுபடுத்தும் வகையில், அரசியல் எதிர்ப்புகளைக் கடந்து உரிமைக்காக குரல் கொடுக்கும் நிலைப்பாடு தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற அணுகுமுறையே முற்போக்குச் சிந்தனையின் அடையாளம் என்றும், அதுவே பிற்போக்கு அரசியல் அணுகுமுறைகளில் இருந்து வேறுபடுகிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை – கமலஹாசன்
