
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்பு கொம்பன் காளை இன்று காலையில் உயிரிழந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த அந்த காளை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அப்பகுதி மக்கள் கருப்புகொம்பனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதிமுகவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஜல்லிக்கட்டு ஆர்வலரான விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து களத்தில் இறக்கி வீரர்களை திணறடித்து வெற்றி வாகை சூடி வந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னலூர் ஜல்லிக்கட்டில் இவரின் கொம்பன் காளை பங்கேற்று களத்தில் நுழைவதற்கு முன்பாகவே வாடிவாசல் பக்கவாட்டுத் தூணில் தலை மோதியதில் துரதிஷ்டவசமாக உயிரிழந்தது . அதன் பின்னர் விஜயபாஸ்கர் நான்கிற்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்தார்.
இவர் வளர்த்து வந்த வெள்ளைக்கொம்பன் காளை அலங்காரநல்லூர், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று மாடுபிடி வீரர்களை திணறடித்து வந்தது . பல்வேறு பரிசுகளை தட்டி சென்று வந்தது. வயது மூப்பின் காரணமாக விஜயபாஸ்கரின் சொந்த கிராமமான ராப்புசலில் வெள்ளை கொம்பன் காளை கடந்த 2021 ஆம் ஆண்டில் உயிரிழந்தது.
அடுத்து இவர் வளர்த்து வந்த கருப்புக்கொம்பன் காளை ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று வந்தது . புதுக்கோட்டை மாவட்டம் வடசேரி பட்டியில் கடந்த மூன்றாம் தேதி அன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கருப்பு கொம்பன் களமிறங்கியது. வாடிவாசல் வழியாக அந்த காளையை அவிழ்த்துவிட்ட போது அங்கிருந்த கட்டையில் மோதி காயம் அடைந்தது. இதை அடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்புக்கொம்பன் இன்று காலையில் உயிரிழந்தது.
கருப்புக்கொம்பன் உயிரிழந்த செய்தி கேட்டது அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


