பொம்மலாட்டக் கலைஞரும் திராவிட இயக்க கவிஞருமான கலைவாணன் முத்துக் கூத்தன் (67) உடல்நலக் குறைவால் காலமானாா்.
தலைசிறந்த பொம்மலாட்டக் கலைஞரும் எழுத்தாளருமான கலைவாணன் முத்துக்கூத்தன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67. அவரது மறைவு கலைத்துறையினரிடமும், சமூக இயக்கங்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

45 ஆண்டுகளுக்கும் மேலாக பொம்மலாட்டக் கலையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று பரப்புரையாக பயன்படுத்தியவர் கலைவாணன் முத்துக்கூத்தன். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமை, சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலன் உள்ளிட்ட சமூக விழிப்புணர்வு கருத்துகளை கலை வடிவில் மக்களிடம் கொண்டு சேர்த்தார். பகுத்தறிவு சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் பரப்பியதில் அவருக்கு தனித்துவமான இடம் உண்டு.
திராவிட இயக்கக் கவிஞராகவும் அறியப்பட்ட கலைவாணன், சமூக மாற்றத்திற்காக கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தியவர் எனப் பாராட்டப்பட்டார். அவரது கலைப்பணிகளையும் சமூகச் சேவையையும் பாராட்டி தமிழக அரசு அவருக்கு “கலைமாமணி” விருது வழங்கி கவுரவித்திருந்தது. மேலும், அவரது தந்தை முத்துக்கூத்தன் தமிழ் திரைப்படத் துறையில் நடிகரும் பாடலாசிரியருமாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கலை மரபை தொடர்ந்து, சமூக அக்கறையுடன் கலைப்பணியில் ஈடுபட்ட கலைவாணன் முத்துக்கூத்தன், பொம்மலாட்டக் கலையை ஒரு விழிப்புணர்வு இயக்கமாக மாற்றியவர் எனக் கருதப்படுகிறார்.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் மற்றும் கலைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “பகுத்தறிவு மற்றும் சமூக விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சென்ற அரிய கலைஞரை தமிழ் சமூகம் இழந்துள்ளது” என பலரும் தங்களது இரங்கலை பதிவுசெய்துள்ளனர். அவரது மறைவு தமிழ் கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
சட்டம்-ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம் தர வேண்டும் – உதயநிதி வலியுறுத்தல்
