16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகளின் மனநலம், கல்வி மற்றும் இணையப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளதாவது, புதிய மசோதா நடப்பாண்டுக்குள் நிறைவேற்றப்பட்டு, 2027ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்டவர்கள் Snapchat, TikTok, YouTube, Instagram, Facebook மற்றும் X உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

சமூக ஊடக பயன்பாடு காரணமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கவனச்சிதறல், மனஅழுத்தம், இணையத் தொல்லைகள் மற்றும் தவறான தகவல்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் கல்வி மற்றும் தனிநபர் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
பிரிட்டனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட சில நாடுகளும் குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளன. இந்தியாவிலும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய வயதில் மாணவர்களின் கவனச்சிதறலை குறைக்கும் நோக்கில் சில மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டுமா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. குறிப்பாக பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் இதுகுறித்த கருத்துகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் டிஜிட்டல் வாழ்க்கை மற்றும் அவர்களின் எதிர்கால வளர்ச்சி இடையே சமநிலையை ஏற்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை ஆராய்ந்து வரும் நிலையில், பிரிட்டனின் இந்த முடிவு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
