சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் பணிப்பெண் மற்றும் அவரது மகன் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நடிகர் ரவி மோகனின் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் மற்றும் அவரது மகன் வீடு திரும்பவில்லை எனக் கூறி, அவர்களது உறவினர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பணிப்பெண் மற்றும் அவரது மகன் வீட்டிற்குள் தங்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரித்தபோது, வீட்டில் திருட்டு சம்பவம் நடந்ததாக சந்தேகம் இருப்பதாகவும், அதுதொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும் நடிகர் ரவி மோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, திருட்டு தொடர்பாக சந்தேகம் இருந்தால் சட்டப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தக் கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவம் தொடர்பாக உரிய புகார் அளிக்குமாறும் நடிகர் ரவி மோகன் தரப்பினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நீலாங்கரை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
”யூசுப்பாகவே வாழ்ந்திருக்கிறார்” – கஸ்தூரிராஜா நடிப்பை புகழ்ந்த தனுஷ்…
