
வெனிசுலா நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வடக்கு கடலோரப் பகுதியை மையமாகக் கொண்டு அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் முறையே 7.2 மற்றும் 7.5 ஆக மிகக் கடுமையானதாகப் பதிவாகியுள்ளது. வெறும் 39 நொடிகள் இடைவெளியில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் காரகாஸ் உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களை ஒட்டுமொத்தமாக நிலைகுலையச் செய்துள்ளது.
தலைநகர் கரகாஸில் இருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள லாகுவைரா நகரை மையமாக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு கட்டடங்கள் தரைமட்டமாகின. பல இடங்களில் சாலைகளில் பெரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளன. மின்சாரக் கம்பங்கள் மற்றும் செல்போன் கோபுரங்கள் சாய்ந்ததால், நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையமான வெனிசுலாவின் மைகுயெட்டியா விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளதால் மூடப்பட்டுள்ளது.

தற்போது வரை 920 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே இன்னும் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பேரழிவின் தீவிரம் அதிகமாக இருப்பதால், தேசிய அவசர நிலையை பிரகடணப்படுத்தியுள்ளா அந்நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்.
“பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர், ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து போர்க்கால அடிப்படையில் இரவும் பகலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கனரக இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதாக மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளை இழந்த லட்சக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, தூய்மையான குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், வெனிசுலாவுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்க அண்டை நாடுகளும், சர்வதேச சமூகமும் முன்வர வேண்டும் என அந்நாட்டு அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல நாடுகள் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன.
