“நல்லவர் – அரசியல்வாதி என்ற இரண்டு வார்த்தைகளுமே ஒன்றுக்கொன்று எதிர் எதிராகவே உள்ளன. இப்படிப் பேசுவதற்காக அரசியல்வாதிகள் என்னை மன்னிக்க வேண்டும்” என்று தமிழக மற்றும் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விமர்சித்துப் பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச கண் மருத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இந்தச் சுவாரசியமான கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

சர்வதேச கண் மருத்துவ மாநாடு
சென்னையில் ‘இந்திய உள்விழிவில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை கழகம்’ (IIRSI 2026) சார்பில் இரண்டு நாள் சர்வதேச கண் மருத்துவ மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தொடங்கி வைத்தார். IIRSI தலைவர் டாக்டர் ஜீவன் சிங் நிதியால், பொதுச் செயலாளர் டாக்டர் அமர் அகர்வால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த நிகழ்வில், உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண் மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர். விழாவில் சிறந்த மருத்துவர்களுக்கான விருதுகளையும் ஆளுநர் வழங்கினார்.
ஆளுநர் பகிர்ந்த பழைய நினைவலை
விழாவில் ஆளுநர் அர்லேகர் பேசுகையில், தான் ஒரு காலத்தில் அரசியல்வாதியாக இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து முழுமையாக வெளியே வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து தனது பழைய நினைவொன்றைப் பகிர்ந்த அவர்.
”நான் முன்பு அரசியல்வாதியாக இருந்தபோது, ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரி ஒருவர் என்னிடம் வந்து, ‘சிறந்த அரசியல்வாதி (Good Politician) என்பவர் யார்?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு நான் அவரிடமே, ‘சிறந்த டாக்டர் யார்?, சிறந்த வழக்கறிஞர் யார்?, சிறந்த கலெக்டர் யார்?’ என்று திருப்பிக் கேட்டேன். அதற்கு அந்த அதிகாரியால் பதில் சொல்ல முடியாமல், ‘நீங்களே சொல்லிவிடுங்கள்’ என்றார். அப்போது நான் அவரிடம், ‘நல்லவர் – அரசியல்வாதி என்ற இரண்டு வார்த்தைகளுமே ஒன்றுக்கொன்று நேர் எதிரானது’ என்று கூறினேன். இதற்காக அரசியல்வாதிகள் என்னை மன்னிக்க வேண்டும்.” என மேடையில் சிரித்தபடி பேசினார்.
நிபுணத்துவத்தை விட மனிதநேயமே முக்கியம்
மேலும், எந்தவொரு துறையில் இருப்பவர்களுக்கும் மனிதநேயம் எவ்வளவு முக்கியம் என்பதை ஆளுநர் வலியுறுத்தினார். ”ஒருவர் எந்தத் துறையில் சிறந்தவராக, பெரும் நிபுணராக இருந்தாலும், அவர்களிடம் மனிதநேயம் இல்லாவிட்டால் அவர்களைச் சிறந்த மனிதர்களாகக் கருத முடியாது. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் எனப் பலரும் தங்களின் துறைகளில் நிபுணர்களாக இருக்கலாம்; ஆனால், அடிப்படையில் மனிதநேயம் இருந்தால் மட்டுமே அவர்களை ‘மிகச்சிறந்தவர்கள்’ எனக் குறிப்பிட முடியும்” என்றார். இறுதியாக மாநாட்டில் பங்கேற்ற கண் மருத்துவர்களிடம் பேசிய அவர், “மருத்துவர்கள் எப்போதும் தங்களை நாடி வரும் நோயாளிகளின் நிலையை, அவர்களின் வலியைத் தொட்டுணர்ந்து, நேசத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.
