அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் தவறான முடிவுகளால் அதிமுக தற்போது அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது என்று சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளருமான ராகேஷ் பரபரப்பான பேட்டியளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் சங்கராபுரம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம், கட்சியின் ஒன்றிய மற்றும் நகர செயலாளர்களின் கடுமையான உழைப்புதான். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தந்த அவர்களுக்குப் பரிசாக, தற்போது அவர்களின் பதவிகளைப் பறித்துவிட்டு புதிய நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உழைத்தவர்களுக்குக் கிடைத்த பரிசு பதவிக் நீக்கமா?
செய்தியாளர்களிடம் பேசிய சங்கராபுரம் எம்.எல்.ஏ ராகேஷ் தெரிவித்ததாவது:
”அதிமுக தோல்வியடைந்த தொகுதிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, வெற்றி பெற்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தின் வெற்றிக்காக இரவும் பகலும் உழைத்தவர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர்.
ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால், என்னை வேட்பாளராக அறிவித்த நேரத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக வடக்கு ஒன்றிய கழக செயலாளரின் மகள் உயிரிழந்தார். அந்தத் துயரமான சூழ்நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் கட்சியின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்த வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரின் பதவியும் தற்போது பறிக்கப்பட்டுள்ளது.”
மாவட்ட செயலாளரின் சுயநலம் – தவெக ஆதரவு குறித்து விளக்கம்
மாவட்ட செயலாளரின் சுயநலப் போக்கிற்கு இணங்கி, அதிமுக பொதுச்செயலாளர் இந்தத் தவறான நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டிய அவர், அரசியல் நிலைப்பாடு குறித்தும் பேசினார்.
“திமுகவுடன் ஒன்று சேர்வது என்பது தற்கொலை முயற்சிக்குச் சமம். அதனால்தான் நான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு தெரிவித்தேன். தவறான முடிவுகளால் அதிமுக சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, எடப்பாடி பழனிசாமி அவர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரை அழைத்துப்பேசி, மீண்டும் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“என்னையும் பதவியிலிருந்து நீக்குங்கள்” – சவால்
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டுத் தங்களை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கிய நிர்வாகிகளை நீக்கியது பெரும் வேதனையளிக்கிறது என்று குறிப்பிட்ட ராகேஷ், “என்னை வெற்றி பெற வைத்த ஒன்றிய, நகர செயலாளர்களை நீக்கிய கையோடு, என்னையும் சின்னசேலம் பேரூர் கழகச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிக் கொள்ளுங்கள்” என்று அதிமுக தலைமைக்குச் சவால் விடுத்துள்ளார்.
