வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள் – போலீசார் விரைந்து நடவடிக்கை
சென்னை திருவொற்றியூர் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் மாட்டிறைச்சி கடைகளை நள்ளிரவில் மூடச் சொல்லி அராஜகத்தில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆதரவாக இஸ்லாமியர்களும் பொதுமக்களும் திரண்டதால் பதற்றம் நிலவியது.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஏராளமான மாட்டிறைச்சி கடைகள் சட்டப்பூர்வ அனுமதி பெற்று, பல ஆண்டுகளாக அமைதியான முறையில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நேற்று நள்ளிரவு பாரத் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி சிவாஜி என்பவர், அங்குள்ள மாட்டிறைச்சி கடைகளுக்குச் சென்று, அவற்றை உடனடியாக மூடுமாறு கூறி உரிமையாளர்களிடம் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். பல ஆண்டுகளாக வாழ்வாதாரத்திற்காக கடை நடத்தி வரும் வியாபாரிகளை அவர் மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது.

நள்ளிரவில் வியாபாரிகள் மிரட்டப்படுவதை அறிந்த அப்பகுதி இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள், பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆதரவாக சம்பவ இடத்தில் உடனடியாக ஒன்று திரண்டனர். அராஜகத்தில் ஈடுபட்ட நிர்வாகிக்கு எதிராக அவர்கள் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் காரணமாக அப்பகுதியில் திடீர் பதற்றமான சூழல் நிலவியது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், திரண்டிருந்த பொதுமக்களை அமைதிப்படுத்தினர். மேலும், அப்பகுதியில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலும், பதற்றத்தை உருவாக்கும் வகையிலும் நள்ளிரவில் அராஜகத்தில் ஈடுபட்ட நபர் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். பல்வேறு சமூக மக்கள் ஒற்றுமையுடன் வாழும் இப்பகுதியில், திட்டமிட்டு பதற்றத்தை உருவாக்க முயன்ற இந்த சம்பவத்திற்கு அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
