சருமப் பராமரிப்புப் பொருட்கள் சந்தையில் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்திற்கும், அவற்றின் அதிகப்படியான விலை உயர்விற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு அதிரடியான புதிய தயாரிப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முகப்பரு மற்றும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்காக, மிகக் குறைந்த விலையில் புதிய ஃபேஸ் வாஷ் (Face Wash) சந்தைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெருநிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் ‘சாலிசிலிக் ஆசிட்’
இன்றைய இளைஞர்களிடையே முகப்பரு (Acne) மற்றும் எண்ணெய் பசை சருமம் (Oily Skin) ஆகியவை பெரும் கவலையாக உருவெடுத்துள்ளன. இதற்காகத் தனியார் பெருநிறுவனங்கள் தயாரிக்கும் சாலிசிலிக் ஆசிட் (Salicylic Acid) அடங்கிய ஃபேஸ் வாஷ்கள் சந்தையில் பல நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றன. இதற்கு மாற்றாக, எளிய மக்களும் தரமான சருமப் பராமரிப்பைப் பெறும் நோக்கில், மத்திய அரசு தனது பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் இந்த புதிய சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜன் ஔஷதி மையங்களில் விற்பனை எப்போது?
நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் பட்ஜெட்டிற்கு ஏதுவாக, இந்த ஃபேஸ் வாஷின் விலை வெறும் ரூ.46.88 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக ஜன் ஔஷதி (Jan Aushadhi) இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஜன் ஔஷதி மருந்தகக் கடைகளில் முறைப்படி விற்பனைக்கு வந்துள்ளது. தரமான மருத்துவப் பொருட்களைக் குறைந்த விலையில் வழங்குவதைப் போல, தற்போது அழகு மற்றும் சருமப் பராமரிப்புப் பொருட்களையும் அரசு மானிய விலையில் வழங்கத் தொடங்கியிருப்பது நுகர்வோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
