நாடு முழுவதும் நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்து, மருத்துவச் சேர்க்கை உரிமையை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, மாநிலங்களவையில் திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
திமுக எம்.பி. பி.வில்சன் நோட்டீஸ்
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையின் 267-வது விதியின் கீழ் அன்றாட அவைப் பணிகளை ஒத்திவைத்துவிட்டு, நீட் தேர்வு விவகாரம் குறித்து அவசரமாக விவாதிக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் நோட்டீஸ் அளித்துள்ளார்.

நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கியக் காரணங்கள்
நீட் தேர்வு முறையைக் கடுமையாகச் சாடி அளிக்கப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் பின்வரும் முக்கிய அம்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன,
- வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள்: நீட் தேர்வில் தொடர்ச்சியாக நடைபெறும் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் காரணமாக இத்தேர்வின் நம்பகத்தன்மை முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.
- பயிற்சி மைய கலாசாரம்: லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்களில் (Coaching Centres) சேர்ந்து படிக்கும் வசதி படைத்த மாணவர்களுக்கே நீட் தேர்வு சாதகமாக அமைகிறது.
- பாதிக்கப்படும் ஏழை மாணவர்கள்: பயிற்சி மையங்களுக்குச் செல்ல முடியாத ஏழை, எளிய மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு இதனால் சிதைக்கப்படுகிறது.
- மாநில உரிமைகள் பறிப்பு: மருத்துவச் சேர்க்கையைத் தீர்மானிக்கும் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான சூழலை இந்தத் தேர்வு உருவாக்கியுள்ளது.
மருத்துவச் சேர்க்கை உரிமை மீண்டும் மாநிலங்களுக்கே வேண்டும்!
“நீட் தேர்வு முறைகேடுகளால் பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. எனவே, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்தும் உரிமையை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என பி.வில்சன், திமுக எம்.பி. தெரிவித்துள்ளாா். மேலும், நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூழலில், நாட்டின் உயரிய அவையான மாநிலங்களவையில் திமுக அளித்துள்ள இந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
