எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் தன் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, சோதனைகளைத் தைரியமாக எதிர்கொண்டு சட்டப்படி வெளியே வருவோம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். சோதனை காரணமாகக் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செந்தில்பாலாஜி தெரிவித்த முக்கியக் கருத்துகள்:


“எந்தத் தொடர்பும் இல்லாத விவகாரம்”
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செந்தில்பாலாஜி, “எந்தவிதத் தொடர்பும் இல்லாமல், துளியும் சம்பந்தம் இல்லாமல், எப்.ஐ.ஆரில் எனது பெயரே இல்லாத நிலையிலும் முன் ஜாமீன் பெற்று தற்போது வழக்கம்போல் கையெழுத்திட்டு வருகிறேன். இன்று காலை சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் வந்தனர்; ஆனால், சோதனை முடிவில் எந்தவித ஆவணமும் சிக்கவில்லை என்று கையெழுத்திட்டுச் சென்றுள்ளனர்” என்றார்.
“மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை”
தொடர்ந்து பேசிய அவர், “சோதனை நடைபெற்றதால் குறிப்பிட்ட நேரத்தில் என்னால் கையெழுத்திட முடியவில்லை; தற்போது வந்து முறையாகக் கையெழுத்திட்டுள்ளேன். உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், தற்போது மேலும் ஒரு புதிய வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனாலும் எனக்கு எந்தக் பயமும் இல்லை; மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. சோதனைகள் எங்கு, எப்போது வந்தாலும் அதனைத் தைரியமாகச் சந்தித்துச் சட்டப்பூர்வமாக வெளியே வருவோம்” என்று உறுதியளித்தார்.
