“சில பேரை பல காலம் ஏமாற்றலாம், பல பேரை சில காலம் ஏமாற்றலாம்; ஆனால், எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது” என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைவர்களில் ஒருவருமான ஆர்.பி.உதயகுமார் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அரசுப் பணி நியமனங்களில் தவெகவினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசுப் பணி நியமனங்கள் மீது வசைபாடிய ஆர்.பி.உதயகுமார்
கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளிலேயே தமிழகத்தின் ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ள தமிழக வெற்றிக் கழகம், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடித்தது. ஆனால், தற்போது அரசுப் பணி நியமனங்களின் நிலவரம் கலவரமாக உருவெடுத்துள்ளதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “முதலமைச்சர் விஜய்யின் திரைப்படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தற்போது அரசுப் பொறுப்புகளில் சத்தமில்லாமல் ரகசியமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அர்ச்சனா கல்பாத்தி: கோயில் அறங்காவலர் நியமனக் குழு உறுப்பினராக, முதல்வர் விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் தயாரிப்பாளரான கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
வெங்கட் நாராயணா: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரான கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்ட வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜகதீஷ் பழனிச்சாமி: முதலமைச்சரின் தனிச் செயலாளராக, விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் இணை தயாரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மனோஜ் பரமஹம்சா: தமிழக அரசின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் தலைவராக, விஜய் பட ஒளிப்பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களைத் தவிர ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ராம்குமார் உள்ளிட்டோர் அரசின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, முதல்வர் விஜய்யின் அன்புக்குரியவரான நடிகை த்ரிஷா எப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற அறிவிப்புக்காக அதிர்ச்சியோடு ஆவலோடும் தமிழகம் காத்திருக்கிறது” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
இயக்குநர் வினோத்தின் கருத்துகளும், வார் ரூம் அரசியலும்
‘ஜனநாயகன்’ திரைப்பட இயக்குநர் விநாத் குறித்தும் ஆர்.பி.உதயகுமார் தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார். “ஜனநாயகன் படத்தை இயக்கிய வினோத், விஜய்யுடன் ஆறு மாதங்களுக்கும் மேலாக நெருங்கிப் பழகியபோதே தனக்கு விஜய் மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். ஒருமுறை கூட விஜய்யை நேரில் சந்திக்காத பொதுமக்களுக்கு அவர் நல்லது செய்வார் என்று எப்படி நம்பியது? தன் பக்கத்தில் இருப்பவர்களுக்கே தெரியாதது பொதுமக்களுக்கு எப்படித் தெரியும் என்று இயக்குநர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவே இதற்குச் சாட்சியாகும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்றைய சமூகத்தில் பொய்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டன. ஒரு பொய்யைச் சமாளிக்க மற்றொரு பொய்யைக் கூற தகவல் தொழில்நுட்ப வார் ரூம்கள் வந்துவிட்டன. இந்த வார் ரூம்களில் மாய பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டு, அரக்க குணம் உள்ளவர்கள் கூட ஆண்டவன் போல் சித்தரிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட வார் ரூம்கள் மூலம் உண்மையை தோற்கடித்து விட்டனர். அரசின் பொய்களை எதிர்த்து உண்மையைச் சொல்லி வெல்ல முடியாத நிலை தற்காலிகமாக ஏற்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார்.
“உணவுள்ள, அறிவார்ந்த தமிழ் சமூகம் விழித்தெழும் நாள் தொலைவில் இல்லை. சிலரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதுதான் காலம் தரும் தீர்ப்பு. அந்தத் தீர்ப்புக்காக தமிழ் இனம் தொடர்ந்து போராடும்” என்று ஆர்.பி.உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தொண்டர்கள் என்ன தீவிரவாதிகளா? – சட்டமன்றத்தில் தமீமுன் அன்சாரி காரசாரம்!
