விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே உள்ள கிராமத்தில் உள்ள தீண்டாமை சுவரை அகற்றக் கோரி நடவடிக்கை எடுக்காததால், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முட்டி போட்டு நடந்து வந்து போராட்டத்தைச் செய்ய முயன்ற நபரை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர்.
மனு அளித்தும் நடவடிக்கை இல்லை
விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், தனது பகுதியில் அமைந்துள்ள தீண்டாமை சுவரை அகற்றக் கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். எனினும், அந்த மனுக்களின் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் வினோத போராட்டம்
அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் விரக்தியடைந்த அவர், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்திற்கு நேரில் வந்து தனது கோரிக்கையை வலியுறுத்த முடிவு செய்தார். தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழைந்த அவர், திடீரென தரையில் முட்டி போட்டு நடந்து சென்று அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முயன்றார்.
போலீசார் நடவடிக்கை – தனிப்பிரிவில் மனு
அங்குப் பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், அவரைப் போலீசார் உடனடியாகக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, கோரிக்கை தொடர்பான மனுவை முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்குமாறு அறிவுறுத்திய காவல்துறையினர், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் தலைமைச் செயலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர்: செல்போன் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் மற்றும் ஆசிரியை கைது!
