கோவை இரயில் நிலையத்திற்கு எதிரே செயல்பட்டு வந்த தனியார் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம், ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் ரூ.12 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ராயல் டிரெய்னிங் டெஸ்டிங் சென்டர் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த முன்னாள் போலீஸ் காவலர் தேவ ஆசீர்வாதம் மற்றும் அவரது மகன் ஆகியோர் நாளிதழ்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கொடுத்துள்ளனர். அதை நம்பி திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் அணுகியுள்ளனர்.

வெளிநாட்டில் எலக்ட்ரீசியன், பிளம்பர், வெல்டர், மேசன் மற்றும் ஸ்டீல் ஃபிட்டர் ஆகிய பணிகளுக்கு மாதம் ரூ.70,000 முதல் ரூ.80,000 வரை சம்பளம் தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளனர்.வெளிநாட்டு வேலைக்காக ஒவ்வொரு நபரிடமிருந்தும் தலா ரூ.3.5 லட்சம் வரை கட்டணமாகப் பெறப்பட்டுள்ளது.
பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல், நிறுவனத்தைப் பூட்டிவிட்டு உரிமையாளர்கள் தலைமறைவாகியுள்ளனர் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட சிலர் வேலை கிடைக்காமலும், அங்கு நிலவிய சூழல் காரணமாகவும் தாயகம் திரும்பினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உள்ளூர்வாசி இளங்கோவன் என்பவர் அளித்த புகாரின் பேரில், உரிமையாளர் கடந்த 17-ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். எனினும், தனி நபர் புகாரின் தொகை குறைவாக இருந்ததால், அவர் கடந்த 5-ம் தேதி நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனால் இது குறித்து பாதிக்கப்பட்டோர் காவல ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ரஃபி கூறும் போது :
நாங்கள் அனைவரும் நகைகளை அடகு வைத்தும், அதிக வட்டிக்குக் கடன் வாங்கியும் தான் இந்தப் பணத்தைக் கொடுத்தோம். இன்னமும் வட்டி கட்ட முடியாமல் கண்ணீருடன் தவித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட 350-க்கும் மேற்பட்டோரின் புகார்களையும் ஒருங்கிணைத்து, இந்த வழக்கை உடனடியாக மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற வேண்டும். அரசு தலையிட்டு எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனத் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நசீமா என்ற பெண் கூறும் போது : தனது கணவருக்கு வெளிநாட்டில் எலக்ட்ரீஷியன் வேலை வாங்கித் தருவதற்காக யூடியூப் விளம்பரத்தைப் பார்த்து கோவையில் உள்ள நிறுவனத்தை அணுகியதாகவும், கடந்த 2024-ஆம் ஆண்டு ரூ. 4 லட்சம் வரை பணம் செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
பணம் பெற்றுக்கொண்ட நிறுவனம் வேலை வாங்கித் தராமலும், முறையான பதில் அளிக்காமலும் ஏமாற்றி வந்துள்ளது. இவரைப் போல் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்திடம் பணத்தைக் கொடுத்துப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட்டிக்குக் கடன் வாங்கிப் பணம் கட்டிய நிலையில், கடன் தொல்லையால் இதில் தொடர்புடைய ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோகமும் நிகழ்ந்துள்ளது. தற்போதைய சூழலில் மாதம் ரூ. 20,000 வட்டி கட்ட முடியாமல், ஊரை விட்டு வெளியூருக்குச் சென்று அன்றாடக் கூலி வேலை செய்து பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நசீமா வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், 50-க்கும் மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட்டுகளும் இதுவரை திருப்பித் தரப்படவில்லை. இவ்வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முதன்மை குற்றவாளியை உடனடியாக மீண்டும் கைது செய்ய வேண்டும் என்றும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உரிய நீதியும் பணமும் திரும்பக் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன?
