கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததாலும், தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததாலும் தமிழகம் முழுவதும் கடுமையான நீர்நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டை உடனடியாக வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனப் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார்.
டெல்டாவில் 95% நீர்நிலைகள் வறண்டன இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள மொத்தமுள்ள 14,141 நீர்நிலைகளில் 10,000-க்கும் மேற்பட்ட ஏரிகளிலும் குட்டைகளிலும் சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் முழுமையாக வறண்டுபோயுள்ளன.

குறிப்பாக, மாநிலத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 95 சதவீத நீர்நிலைகள் நீர்வரத்தின்றி முற்றிலும் வறண்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் அநீதியும் அரசின் மெத்தனமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய காவிரித் தண்ணீரை கர்நாடகா வழங்க மறுத்து வருகிறது.
இதற்கிடையே பருவமழையும் பொய்த்துப்போனதால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த மிக மோசமான சூழ்நிலையை முன்கூட்டியே கணித்து, அதனை எதிர்கொள்வதற்கான தகுந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாற்றுத் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளத் தவறிவிட்டது என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரிக்கை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டம் மேலும் சரிவதைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், “தமிழகத்தை உடனடியாக வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை அரசு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
