கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து தகராறில் கொழுந்தனை சப்பாத்திக் கட்டையால் அடித்துக் கொலை செய்த அண்ணியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (66). இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே நீண்டகாலமாகச் சொத்து தொடர்பான முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று மீண்டும் இது தொடர்பாகக் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணனின் அண்ணி பொன்னாம்மாள், வீட்டில் இருந்த சப்பாத்திக் கட்டையை எடுத்து பாலகிருஷ்ணனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள பொன்னாம்மாளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு, காவல் துறையினர் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர். சொத்து பிரச்னைக்காகக் கொழுந்தனை அண்ணியே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
