தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஜி.கே. சங்கர் மற்றும் பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உரையாடல் எனக் கூறி இணையதளங்களில் வெளியான ஆடியோ பதிவு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடியோவின் விவரம்:
சமீபத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட பாலசுப்பிரமணி வாய்ப்புக் கேட்டதாகவும், அதற்கு “ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட 1 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி வரும், அவ்வளவு தொகையை எவ்வாறு தயார் செய்வாய்?” என மாவட்டச் செயலாளர் பேசியதாகவும் ஆடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், பல்லடம் சட்டமன்ற உறுப்பினரை தன்னிடம் தெரிவிக்காமல் சந்திக்கச் சென்றது குறித்தும் மாவட்டச் செயலாளர் கண்டித்துப் பேசியதாக அந்த ஆடியோவில் பதிவாகியிருந்தது.
ஒன்றிய செயலாளரின் ஒப்புதல் வாக்குமூலம்:
இந்த ஆடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி இது குறித்துப் பேட்டி அளித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்த விளக்கத்தில், “மாவட்டச் செயலாளர் ஜி.கே. சங்கர் மீது இருந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், பல்லடம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி கூறியதன் பேரிலுமே நிர்வாகிகளிடம் பேசிய இந்த உரையாடலைப் பதிவு செய்து வெளியிட்டேன்” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
