வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது வன்முறையைத் தூண்டியதாகக் கூறpப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 மூத்த தலைவர்களுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
பின்னணியும் தீர்ப்பின் விவரங்களும்
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டம் கடுமையான வன்முறையில் முடிந்தது. இதன் தொடர்ச்சியாக அங்கு ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு, அப்போதைய பிரதமரான ஷேக் ஹசீனா கடந்த 2024 ஆகஸ்ட் 5 அன்று டாக்காவில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் தற்போது வரை இந்தியாவில் தான் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்கள் மற்றும் மாணவர் போராட்டங்களை ஒடுக்க முயன்றது, ஊடகங்களைக் கட்டுப்படுத்த முயன்றது போன்ற பல்வேறு தீவிரக் குற்றச்சாட்டுகளின் கீழ் அவாமி லீக் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி முகமது நஸ்ருல் இஸ்லாம் சவுத்ரி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் – 2, நேற்று (செப். 15) தனது தீர்ப்பை வழங்கியது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட முக்கியப் பிரமுகர்கள்
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள கீழ்க்கண்ட 7 மூத்த தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது:
ஒபைதுல் குவாடர் (அவாமி லீக் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர்)
ஏ.எப்.எம். பஹாவுதீன் நசிம் (அவாமி லீக் இணைப் பொதுச் செயலாளர்)
முகமது அலி அரபாத் (முன்னாள் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர்)
ஷேக் பஸ்லே ஷம்ஸ் பராஷ் (ஜூபோ லீக் தலைவர்)
மைனுல் ஹொசைன் கான் நிகில் (ஜூபோ லீக் பொதுச் செயலாளர்)
சதாம் ஹுசைன் (வங்கதேச சத்ரா லீக் தலைவர்)
ஷேக் வாலி ஆசிஃப் எனன் (வங்கதேச சத்ரா லீக் பொதுச் செயலாளர்)
இந்த நபர்கள் யாரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத நிலையிலும், நீதிமன்றம் இவர்களுக்கான மரண தண்டனையை வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது கட்சியின் முக்கியத் தலைவர்கள் 7 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது வங்கதேச அரசியலில் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
