கடந்த 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. இந்த படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாபெரும் வரவேற்பு பெற்றது.
தற்போது 17 வருடங்கள் கழித்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகத்தையும் பி வாசு தான் இயக்குகிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், ராதிகா, கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. பாகுபலி இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை, மைசூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.
அதைத்தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள காட்சிகள் கடந்த மாதம் படமாக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியான நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது.
இதனை உறுதி செய்யும் விதமாக நடிகை ராதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் ராதிகாவிற்கு, தங்க மோதிரம் மற்றும் விலை உயர்ந்த வாட்ச் இரண்டையும் ராகவா லாரன்ஸ் பரிசளித்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.