ப்ரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
மலையாளத்தில் வெளியாகி பான் இந்தியா அளவில் ஹிட் அடித்த ‘பிரேமம்’ படத்தை அல்போன்ஸ் புத்ரன் இயக்கியிருந்தார்.

இன்று மலையாள சினிமா விரும்பிகள் என்று மார் தட்டிக் கொள்ளும் பலரை மலையாளப் படங்களை நோக்கி படையெடுக்க செய்த பெருமை பிரேமம் படத்தையே சேரும்.
சாய் பல்லவியின் மலர் டீச்சர் கதாபாத்திரம் கிளாசிக் ஆக மாறியுள்ளது. எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் தான் படத்தின் கூடுதல் பலம். மேலும் படத்தின் உருவாக்கம் டெம்பிளேட்களை உடைத்தெறிந்து எளிமையான காட்சிகள் மூலம் பார்வையாளர்களின் இதயத்தின் ஊடாக பாய்ந்தது.
ப்ரேமம் படத்தை அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கோல்டு படத்தை அல்போன்ஸ் இயக்கியிருந்தார். ஆனால் இந்தப் படம் சற்று ஏமாற்றம் அளித்தது உண்மை தான்.
இந்நிலையில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை அல்போன்ஸ் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.