திருச்சி பெரியார் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் ரத்து?- பொன்முடி விளக்கம்
ஜூன் 21 ஆம் தேதி வரை அரசு கலை கல்லூரிகளில் 77,084 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிகரித்துக் கொள்ளலாம். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்தி கொள்ளலாம். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 30 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். திருச்சி பெரியார் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் ரத்து என்பது தவறான தகவல்.
அரசு கல்லூரிகளில் காலியிடங்களை முற்றிலுமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டரை இலட்சம் பேர் அரசுக் கலைக்கல்லூரிகளில் படிக்க விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஒரு லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ளன. இதுவரை சுமார் 80 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அரசுக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளோம். ஜூன் 21 ஆம் தேதி வரை அரசு கலை கல்லூரிகளில் 77,084 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கல்லூரியில் சேர்ந்த பிறகு இன்னொரு கல்லூரியில் மாணவர்கள் சேர விரும்பினால் அவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தையும், சான்றிதழையும் கல்லூரி நிர்வாகம் எந்த தடையுமின்றி உடனே வழங்கும்.” என விளக்கம் அளித்தார்.