இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 10 பேர் பலி
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நள்ளிரவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்தனர். விபத்தை தொடர்ந்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள பெர்ஹாம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான இலவச சிகிச்சை வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.


நிதி அமைச்சர் விக்ரம் அருக் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய உத்தரவிட்டார். விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். நள்ளிரவில் இந்த விபத்து நேரிட்டதை அடுத்து, ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்த அனைவரும் நல்ல ஆழ் உறக்கத்தில் இருந்த நிலையில், விபத்தில் அவர்களது உயிர் பிரிந்தது.
இதனிடையே ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்து வேதனையளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 அளிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


