பொறியியல் படிப்பு கலந்தாய்வு தள்ளிவைப்பு- அமைச்சர் பொன்முடி
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்காத காரணத்தால், பொறியியல் கலந்தாய்வு நடத்த தாமதமாகும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் திருச்செந்தூரை சேர்ந்த நேத்ரா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். தருமபுரியை சேர்ந்த ஹரினிகா இரண்டாவது இடத்தையும், திருச்சியை சேர்ந்த ரோஷ்னி பானு என்பவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். பொறியியல் தரவரிசை பட்டியலில் 102 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை மாணவர்கள் http://tneaonline.org என்ற இணையத்தில் பார்க்கலாம். கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

தரவரிசை பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “ஜூலை 2ஆம் தேதி தொடங்குவதாக இருந்த பொறியியல் படிப்பு கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்காத காரணத்தால், பொறியியல் கலந்தாய்வு நடத்த தாமதமாகும். நீட் தேர்வு முடிவு காரணமாக பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 2 ஆம் தேதிக்கு பதில் 10 நாட்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. இருமொழிக்கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இன்னும் 2 மாதம் செப்டம்பரில் மாநில கல்விக்கொள்கை வந்துவிடும்” என்றார்.