ஈரோட்டில் 8 நாட்களாக நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை ரத்து செய்ய கோரி கடந்த 8 நாட்களாக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
ஈரோடு மாநகராட்சியில் 1200-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பணியாளர்கள் உள்ள நிலையில், தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி தூய்மைப் பணிகளில் தனியாரை அனுமதித்தால், நிரந்தர பணியிடங்கள் ரத்து செய்யப்படுவதுடன், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும், தற்போது 707 ரூபாய் ஊதியம் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு ஊதியம் 532 ரூபாயாக குறைக்கப்படும், வேலைப்பளு அதிகரிக்கும் என தூய்மை பணியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யவும், 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்துவதுடன் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு 725 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 23 ம் தேதி முதல் காலவரையற்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மேயர், ஆணையர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும், தொழிலாளர்களுக்கு பணி உத்தரவாதம் மற்றும் ஊதியம் குறைக்கப்படாது என வாக்குறுதி அளித்தனர்.

இதனை ஏற்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தனர். இதற்கு ஒரு சில தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். எனினும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.. கடந்த ஒருவாரமாக நிரந்தர தூய்மை பணியாளர்கள் மட்டுமே பணியில் இருந்த நிலையில், தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களும் பணிக்கு திரும்பியதால் தேங்கிய குப்பைகள் ஓரிரு நாளில் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.