20-வது சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு விழா ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

கடந்த 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விழாவில் 51 நாடுகளின் 102 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் தமிழ் பிரிவில் 12 படங்களும், இந்தியன் பனோரமா பிரிவில் 3 தமிழ் படங்களும் திரையிடப்பட்டன.

இன்று நடைபெற்ற நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினராக இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற படங்களுக்கு பரிசுகளை வழங்கினார். இயக்குனர் பாரதிராஜா விழாவில் பங்கேற்க முடியாத காரணத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருதை அவருக்கு விலா மேடையில் வழங்கப்படவில்லை. திரையிடப்பட்ட 12 தமிழ் படங்களில் வெற்றி பெற்ற 9 படங்களுக்கு சான்றிதழ், பரிசுத்தொகையுடன் விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் சேதுபதிக்கும் (மாமனிதன்), ‘பூ’ ராமுவுக்கும் (கிடா) பகிர்ந்து வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருது கார்கி படத்துக்காக சாய் பல்லவிக்கு வழங்கப்பட்டது. சிறந்த படம் – கிடா (வெங்கட்), 2-வது சிறந்த படம் – கசடதபற (சிம்புதேவன்), சிறந்த ஒளிப்பதிவு – இரவின் நிழல் (அர்தூர் வில்சன்), சிறந்த படத்தொகுப்பு – பிகினிங் (சி.எஸ்.பிரேம்குமார்), சிறந்த ஒலி வடிவமைப்பு – நட்சத்திரம் நகர்கிறது (அந்தோனி ரூபன்), ஸ்பெஷல் ஜூரி விருது – இரவின் நிழல் (பார்த்திபன்), ஸ்பெஷல் மென்சன் விருது கருணாஸ் நடிப்பில் வெளியான ஆதார் படத்துக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரி மாணவர்கள் மூலம் திரையிடப்பட்ட 9 படங்களில் 3 படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.