தனுஷ் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படமாகும்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது எனினும் படக்குழுவினர் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, காளிதாஸ், துசாரா விஜயன், சந்தீப் கிஷன் அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ப. பாண்டி திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மேலும் சமீபத்தில் தனுஷ் திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, D50 படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர்.
அந்த போஸ்டரில் தனுஷ் மொட்டை தலையுடன் மாஸாக இருப்பது போன்று அமைக்கப்பட்டிருந்தது.
தற்போதைய தகவல்கள் என்னவென்றால், இந்த படம் வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. மேலும் தனுஷின் 50வது படமான இந்த படத்திற்கு ராயன் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் தனுஷ் இந்த படத்தை மூன்று மாதங்களில் முடித்துவிட்டு விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.