தனுஷின் 50வது படத்தில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் தற்போது அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சிவராஜ்குமார் ,சந்திப் கிஷன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மூன்று பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், தனுஷ் தனது ‘D50’ படத்தை தானே இயக்கி நடிக்க இருக்கிறார். தனுஷ் ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ப.பாண்டி திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 5 வருடங்கள் கழித்து தனது 50வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் எஸ் ஜே சூர்யா, சந்திப் கிசன், காளிதாஸ், துசாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் தனுஷ், சமீபத்தில் திருப்பதியில் மொட்டை அடித்து ஏழுமலையானை தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தனுஷின் 50வது படத்திற்கான கெட்டப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இதன் கூடுதல் தகவலாக, தனுஷின் D50 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இந்த போஸ்டரில் தனுஷ் மொட்டை தலையுடன் மிரட்டலாக நிற்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
பா பாண்டி படத்திற்குப் பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.