சுங்கக் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக சார்பில் போராட்டம்
அவ்வப்போது சுங்க கட்டணத்தை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்தும் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னம்பலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிகவின் சார்பில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு சுங்கச்சாவடியை முற்றுகையிடுதற்காக சுங்கச்சாவடியை நோக்கிச் சென்ற தேமுதிகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பிய தேமுதிகவினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் களமாவூர் அருகே உள்ள லட்சுமணபட்டி சுங்கச்சாவடியில் கைகளில் பதாகைகள் ஏந்தி ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்க சாவடியில் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கசாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் உள்ள சுங்கசாவடி முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி உள்ளிட்ட தமிழகத்தில் 26 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வானது கடந்த 1ம் தேதி முதல் அமுலுக்கு வந்தது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ரூபாய் 5 முதல் ரூ.240 வரை கட்டண உயர்வு உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தேமுதிக சார்பில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் விக்கிரவாண்டி சுங்க சாவடியை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசு சுங்க சாவடி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் இந்த சுங்கச்சாவடி கட்டணத்தை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு தேமுதிக மாவட்ட கழக செயலாளர் தயாள லிங்கம் தலைமையில் தேமுதிக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.