இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் கோயில் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை, 24 மணி நேர உதவி மையத்தை தொடங்கி வைத்தார்.


அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “கோயிலுக்கு தேவையான வசதிகள் மற்றும் குறைகளை பக்தர்கள் புகார் தெரிவிக்கலாம். சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கோயிலில் பக்தர்களிடம் அத்துமீறல் இல்லாமல் நிர்வாகம் நடக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். புகார்கள் விசாரணைக்கு வந்த போதே நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று தீட்சிதர்கள் தரப்பிலே கூறினார்கள். அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்வார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் இதுவரைக்கும் அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை. கோயிலில் அத்துமீறல் இருப்பது ஆதாரத்தோடு உறுதியான பின் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொன்மை வாய்ந்த கோயில்களை புனரமைக்கும் பணிகளில் உபயதாரர்கள் பங்கேற்கலாம். திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே வெளிநாட்டில் இருந்து அதிக சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சி குற்ற நிகழ்வுகளை தடுக்கிறது. ஏற்கனவே நடந்த குற்றத்தை கண்டுபிடித்து சிலைகள் மீட்கப்பட்டுவருகின்றன. திமுக ஆட்சியில் 281 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. 160 சிலைகள் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் சிலைகளுக்கான ஆவணங்களை கொடுத்தால் சிலைகளை கொடுக்க தயார்” எனக் கூறினார்.
