மேலூர் அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது முத்தம்பட்டி. இங்கு வசித்து வரும் ஜெயபிரகாஷ் என்பவரது மகன் அரவிந்தன் (13) குறிச்சிபட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அரவிந்த் சிறுவயதில் இருந்தே பழுது அடைந்த எலக்ட்ரிக் பொருட்களை சேகரித்து விளையாட்டு பொருட்களை செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது பழைய வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுவன் மின் வயரை சுவிட்ச்போர்டில் சொருகியதாக கூறப்படுகிறது. அப்பொழுது மின்கசிவு ஏற்பட்டு சிறுவன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த உறவினர்கள் உடனே சிறுவனை மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
