ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர் முர்மு பரிந்துரைத்துள்ளார்.


2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பேரவையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு, திராவிட மாடல், சமூக நீதி அரசுக்கு மனபூர்வமான பாராட்டு என்று ஆளுநர் உரை புத்தகத்தில் இருந்ததை தவிர்த்து வழக்கத்திற்கு மாறாக புதிய சில கருத்துகளை சேர்த்து உரையாற்றினார். அரசின் உரையை படிக்க தவறியதுடன் பேரவை நிகழ்வுகள் நிறைவடைந்து தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன் ஆளுநர் எழுந்து வெளியேறினார்.
இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அவை மரபை மீறியதாக, கடந்த 2 நாட்களுக்கு முன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளாங்கோ, வில்சன் ஆகியோர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து, தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் கடிதத்தை வழங்கினர். அந்த கடிதத்தில் ஆளுநர், அரசியல் சாசனத்தை மீறி செயல்படும் ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மரபை மீறி நடந்துகொண்ட ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்கவும் திமுக பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் அளித்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய அரசுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பரிந்துரைத்துள்ளார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.
