நடிகர் மன்சூர் அலிகான் சமூக வலைத்தளத்தில் நடிகை திரிஷாவைப் பற்றி அநாகரிகமாகப் பேசிய பேச்சு பலரை கொந்தளிக்கச் செய்தது. லியோ படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார்.
இந்நிலையில்தான் த்ரிஷாவை பற்றிய மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை குஷ்பூ, சிரஞ்சீவி போன்றோரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் சூடு பிடிக்க, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து மன்சூரலிகானை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டதால் வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டார் திரிஷா. இத்துடன் விவகாரம் முடிந்தது என நினைத்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தை நாடிய மன்சூர் அலிகான் குஷ்பூ, சிரஞ்சீவி, திரிஷா ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடுத்தார். தான் பேசிய வீடியோவை முழுமையாகப் பார்க்காமல் ஒரு பகுதியை மட்டும் பார்த்து அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்து தனது நற்பெயரை கெடுத்து விட்டதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக 1 கோடி ரூபாய் தனக்கு வழங்க வேண்டும் என்றும் மன்சூர் அலிகான் முறையிட்டுருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சமூகத்தில் பெண்களை அநாகரிகமாகப் பேசும் பொழுது அதனை சக மனிதர்கள் கண்டிப்பது மனித இயல்பு. இந்த மான நஷ்ட வழக்கு செல்லாது என சுட்டிக்காட்டினர். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகவும், பப்ளிசிட்டிக்காக இந்த வழக்கை தொடுத்துள்ளதாகவும் இதற்கு அபராதமாக மன்சூர் அலிகான் 1 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.