திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் நிகழ்ந்த விபத்தில் லைட் மேன் ஒருவர் உயிரிழந்தார்.


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஐயர்கண்டிகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்பு மட்டுமல்லாது இசையமைப்பு, பிண்ணனி இசையமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்யராஜ் நடிக்கும் வெப்பன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மேற்கொள்வதற்காக ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் இன்று அதிகாலை சென்னை சாலிக்கிராமத்தை சேர்ந்த குமார் 47 என்ற லைட்மேன் சுமார் 40அடி உயரத்தில் மின்விளக்குகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குமார் கால்தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த குமாரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து லைட்மேன் குமாரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படப்படிப்பிற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்த லைட்மேன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
