தெலுங்கில் மெகா ஸ்டாராக கொண்டாடப்படும் நாயகன் சிரஞ்சீவி 80-களில் தொடங்கி இன்று வரை ஆக்ஷன் ஹீராவாக கலக்கி வருகிறார். இவரது மகன் ராம்சரணும் தெலுங்கில் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சிரஞ்சீவி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் போலா சங்கர். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத் தொடர்ந்து, தற்போது விஷ்வாம்பரா படத்தில் நடித்து வருகிறார். இது சிரஞ்சீவி நடிக்கும் 156-வது திரைப்படமாகும். இதில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார்.
இதனிடையே நடிகர் சிரஞ்சீவிக்கு, பத்மவிபூஷண் விருதை ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கு அனைத்து திரையுலக நடிகர், நடிகைகளும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கன்னட நடிகர் சிவராஜ்குமார், சிரஞ்சீவி வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிவராஜ்குமார், அண்மையில் ரஜினிகாந்த் நடித்திருந்த ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி வீட்டிற்கு சிவராஜ்குமார் நேரில் சென்றார். அவருக்கு வாழ்த்து கூறி சிவராஜ்குமார், தொடர்ந்து அவரது வீட்டில் அறுசுவை விருந்து உண்டு மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.