சென்னையில் மின்சார ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவி மற்றும் கல்லூரியில் படிக்கும் இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் ஒன்று வழக்கம்போல் சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு 9 மணி அளவில் பரங்கிமலை ரயில் நிலையம் வந்து கொண்டிருந்த அந்த ரயில் முன் இளம் பெண் மற்றும் இளைஞர் ஒருவர் திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் ரயிலில் அடிபட்டு தலை நசுங்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் இளங்கோவன்(19) கீழ்கட்டளையை சேர்ந்தவர் என்றும் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருவதாகவும் தெரிகிறது. உயிரிழந்த பெண் (ஐஸ்வர்யா) முகம் சிதைந்துள்ளதால் அவரின் விவரங்களை கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் உடல் உடற்கூறாய்விற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் இந்த தற்கொலை முயற்சி நடந்திருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
