தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் சென்னையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சி.டி.ரவி, “தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் பணபலம் விளையாடும் என்பதை அறிவோம். இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த ஒன்றுபட்ட அதிமுக அவசியம். பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் ஜே.பி.நட்டா கூறிய தகவலை தெரிவித்தேன். இடைத்தேர்தலில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து பணியாற்ற பாஜக சார்பில் வலியுறுத்தினோம். இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று எடுத்துக் கூறினோம். அதிமுகவை ஒன்று சேர்க்கவே பாஜக சார்பில் முயற்சிக்கிறோம். வேட்புமனு நிறைவு பெற பிப்ரவரி 7 ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் பாஜகவின் நிலைப்பாட்டை அப்போது அறிவிப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி ஒன்றுபட்டு இருக்க வேண்டியது அவசியம்” என்றார்.

தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “உறுதியான நிலையான அதிமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தேவை. உறுதியான வேட்பாளரை நிறுத்த வேண்டியது அவசியம் என அதிமுகவிடம் வலியுறுத்தினோம்” எனக் கூறினார்.
பன்னீர்செல்வத்துடன் சமரசமாக செல்லுமாறு பாஜக தலைமை வற்புறுத்துவதால் பழனிசாமி செய்வதறியாது தவிக்கிறார். பன்னீருடன் சமரசம் செய்துகொள்ள பழனிசாமி இறங்கி வராததால் தனது நிலையை அறிவிக்கமுடியாமல் பாஜக திணறுகிறது.
