மதுரையில் நடைபெற உள்ள சித்திரை திருவிழாவிற்காக அழகர் கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகரின் தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்கள்
மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனம், கருட வாகனம், சேச வாகனம் உள்ளிட்டவை மதுரையில் நடைபெற உள்ள சித்திரை திருவிழாவிற்காக இன்று எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்கள் அனைத்தும் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் வைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி சித்ரா பௌர்ணமி தினமான வரும் 23ஆம் தேதி காலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 08ஆம் தேதி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியின் போது அழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.
அதனைத் தொடர்ந்து 23ஆம் தேதி இரவு மதுரை வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலை சென்றடையும் அழகர் மறுநாள் காலை கருட வாகனத்தில் புறப்பாடாகி தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து 24 ஆம் தேதி இரவு மதுரை ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் 10 அவதாரங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான வாகனங்கள் மதுரை அழகர் கோவிலில் இருந்து இன்று பலத்த பாதுகாப்புடன் கோவில் பணியாளர்களால் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.