மதுபாட்டிலில் ஊசி மூலம் விஷம் கலந்து கொடுத்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் மதுராந்தகம் அருகே அரங்கேறியுள்ளது. நட்புக்காக குடித்த நண்பனும் உயிரிழந்த சோகம்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர்கள் சுகுமார் – கவிதா தம்பதி. சுகுமார் செங்கல்பட்டில் கோழி இறைச்சி கடையில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி கவிதா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கவிதாவுக்கு, தன்னுடன் நிறுவனத்தில் பணிபுரியும் வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான தகாத உறவை அறிந்த சுகுமார், கவிதாவை பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக சண்டைபோட்டு இருவரும் சில காலம் பிரிந்திருந்ததாகத் தெரிகிறது.


இதற்கிடையே கணவரை தீர்த்துக்கட்ட எண்ணிய கவிதா, கடந்த சனிக்கிழமை கணவர் சுகுமாரின் அண்ணனான மணி என்பவரிடம் பணம் கொடுத்து இரண்டு மது பாட்டில்களை வாங்கி வர சொல்லி இருக்கிறார். அவரும் 2 பாட்டில்களை வாங்கிவந்துக் கொடுக்க , அதில் ஒன்றை மணியிடம், ‘நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றுக்கூறி கொடுத்துவிட்டு, ஒரு மது பாட்டிலை மட்டும் வாங்கிக்கொண்டிருக்கிறார். அதில் யாருக்கும் தெரியாமல் ஊசி (சிரஞ்சி) மூலம் விஷம் கலந்துள்ளார். அதை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, வேறு யாரோ கொடுத்துவிட்டுச் சென்றதாகக் கூறி சுகுமாரிடம் கவிதா கொடுத்திருக்கிறார். ஆனால் அன்றையதினம் அவர் ஏற்கனவே நிறைய குடித்திருந்ததால், பிறகு குடித்துக்கொள்ளலாம் என அந்த பாட்டிலை அப்படியே வைத்துள்ளார்.
மறுநாள் திங்கட்கிழமை காலையில் வேலைக்கு செல்லும் பொழுது இந்த மதுபாட்டிலை எடுத்துச் சென்றிருக்கிறார். மதிய உணவு நேரத்தின்போது சுகுமாரும், அவருடன் பணிபுரியும் நண்பரான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரியிலால் என்பவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மது அருந்திவிட்டு மீண்டும் வேலையை தொடங்க செல்லும் பொழுது இருவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதில் அரியிலால் அங்கேயே மயங்கி விழுந்ததால் அவரை உடனடியாக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிறகு வீட்டுக்கு சென்ற சுகுமாருக்கும் நிலைமைசமாகவே அவரையும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையின் போது தான் அவர்கள் அருந்திய மதுவில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் பட்டாளம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சுகுமாரின் மனைவி கவிதாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் மதுவில் விஷம் கலந்ததை கவிதா ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


